அடக்கம்

‘அடக்கம் அமருள் உய்க்கும்’ என்று, வள்ளுவம் கூறுகிறது. அடக்கம் மனிதனை உயர்த்தும். அடங்காவிட்டால் அடர்ந்த இருள் ஆழ்த்திவிடும். அடங்க அடங்க வாழ்வு உயரும். அடக்கத்தை அடைந்தவர்கள், வானோருடன் ஒப்பிட்டு கூறத்தக்க அளவுக்குப் புகழ் பெற்று உயர்வார்கள்.

ஆமையைப் போல அடக்கம் வேண்டும். ஆமையின் அடக்கத்தினை ஐந்தடக்கம் என்பர். மெய், வாய், கண், காது, மூக்கு ஆகிய புலன்கள் ஐந்தையும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதையும் அடக்கமே பாதுகாக்கும். புலன்களின் வழியில் மனம் போனால், புத்தியும் சத்தியும் கெடும். கண் பார்த்ததையும் காது கேட்டதையும் வாய் விரும்பியதையும் மூக்கு நுகர்ந்ததையும் மெய் விரும்பியதையும் அடைய வேண்டுமென்று மனம் அவாவினால், வாழ்க்கையில் துன்பத்தை விட வேறு ஒன்றும் இருக்காது. துன்பத்தைத் தொலைக்க வேண்டுமானால், புலன்களின் அவாவினைக் கட்டுக்குள் கொண்டு வரவே அடக்கம் வேண்டுமென்று கூறப்படுகிறது.

அடக்கத்தைக் கூறும் நூல்களாகிய பகவத் கீதை (2-58), மனு ஸ்மிருதி (பா-105), நாலாயிர திவ்விய பிரபந்தம் (2360) மகாபாரதம் போன்றவை அடக்கத்திற்கு உதாரணமாக ஆமையைக் கூறுகின்றன.

ஆமை, தன் அங்கங்களை ஓட்டுக்குள் இழுத்துக் கோவது போல, அடக்கத்தை மேற்கொள்வோர்கள் தங்கள் புலன்களை அடக்கி உள்ளே இழுத்துக் கொள்கிறார்கள். அதனால், அவர்கள் ஞானநிலை பெற்றதாகிறது என்று, விளக்கங்கள் கூறப்படுகின்றன.

ஆமையைப் போலப் புலன்களை உள்ளே இழுத்துக் கொண்டு அடக்கு! அடங்கு! என்று, திருமந்திரம் கூறவில்லை. அடக்கு என்னும் கருத்தையே திருமந்திரம் ஏற்கவில்லை. புலன்களை அடக்க முடியாது. அடக்குவதால் எந்த பயனையும் அடைய முடியாது. புலன்களோடு கூடியிருந்து அவை பெற்ற பயனை அடையவேண்டும் என்பது, திருமந்திரம் கூறும் தெளிந்த கருத்து.

“அஞ்சும் அடக்குஅடக்கு என்பார் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடங்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவுஅறிந் தேனே”

என்பதால், உலக இன்பங்களை நெறிப்பட்ட முறையில் நுகர்ந்து கொண்டே பேரின்பம் பெற முடியும்! என்று, திருமந்திரம் கூறும் கருத்து எத்துணைப் பொருத்தமுடையது என்பதை உணரலாம்.

உலகிலேயே அதிக நாள் உயிர்வாழும் விலங்கு ஆமை ஒன்றுதான். ஆமை, அதிக நாள் வாழ்வதற்குக் காரணம் எதுவாக இருக்கும். ஆமை என்ன யோகநெறியா பயின்றிருக்கிறது! காய கல்பம் சாப்பிடுகின்றதா? பின்பு எப்படி அதனால் அதிக நாள் வாழ முடிகிறது? என்னும் ஆராய்ச்சியினால் கிடைத்த முடிபை உரைக்கிறது, திருமந்திரம்.

ஒரு நிமிடத்துக்கு 15 முறை சுவாசித்தால் ஆயுள்
100 ஆண்டாகும்.

ஒரு நிமிடத்துக்கு 18 முறை சுவாசித்தால் ஆயுள்
83⅓ ஆண்டாகும்.

ஒரு நிமிடத்துக்கு 2 முறை சுவாசித்தால் ஆயுள்
750 ஆண்டாகும்.

ஒரு நிமிடத்துக்கு 1 முறை சுவாசித்தால் ஆயுள்
1500 ஆண்டாகும்.

ஒரு நிமிடத்துக்கு 0 முறை சுவாசித்தால் மரணம் என்பதே இல்லை.


இவற்றுக்கும் ஆமைக்கும் என்ன தொடர்பு? என்றால், ஆமை ஒரு நிமிடத்துக்கு மூன்று முறை மட்டுமே சுவாசிக்கிறது.

ஆக, நீண்ட நாள் வாழ வேண்டுமானால், சுவாசத்தைக் கட்டுப் படுத்தும் மூச்சுப் பயிற்சியைச் செய்தோ மானல் நீண்ட நாள் வாழலாம்! என்பது, புலனாகிறது. பெரு மூச்சு விடாதீர்கள். அது ஆயுளைக் குறைக்கும்.

பிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் - இரா. கலைக்கோவன்



தமிழர் வாழும் இடமெல்லாம் இன்று தழைத்துப் பெருகியிருக்கும் பிள்ளையார் வழிபாடு, தமிழ்நாட்டில் எந்தக் காலத்தில் தோன்றியதென்பது குறித்துப் பல ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. எனினும், அவற்றுள் எந்த ஆய்வும் திடமான முடிவுகளை முன்வைக்காமை பெருங்குறையே.

தமிழர் வரலாறு போதுமான சான்றுகளைக் கொண்டு தொடங்குவது சங்க காலத்திலிருந்துதான். கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை செழித்திருந்த இச்சங்க காலத் தமிழர் வரலாற்றைத் தெளிவுற அறிய இலக்கியங்களும் கல்வெட்டுகளும் அகழ்வாய்வுச் சான்றுகளும் நன்கு உதவுகின்றன. இக்காலகட்டத் தமிழர் சமய வரலாறு பல்துறை அறிஞர்களால் தொகுக்கப்பெற்றுள்ளது. சேயோன் (முருகன்), மாயோன் (திருமால்), வேந்தன் (இந்திரன்), வருணன்(1), பழையோள்(2) (கொற்றவை), முக்கண்ணன்(3) (சிவபெருமான்), பலராமன்(4), உமை(5) எனத் தமிழர் வழிபட்ட தெய்வங்களைச் சங்க இலக்கியங்கள் பல பாக்களால் அறிமுகப்படுத்துகின்றன. சங்க இலக்கியங்களுள் காலத்தால் பிற்பட்டனவாகக் கருதப்படும் கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டும் இறை சார்ந்த பல தொன்மங்களை விளக்குகின்றன. சங்க காலத்திற்குச் சற்று முற்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தொல்காப்பியமும் தமிழர் வழிபாட்டுச் சிந்தனைகளை முன்வைக்கிறது. இவ்விலக்கியங்களுள் ஒன்றுகூட, மறை பொருளாகவேனும் பிள்ளையார் வழிபாட்டைப் பற்றி யாண்டும் குறிப்பிடாமை நினைவு கொள்ளத்தக்கது.

'நல்லவுந் தீயவும் அல்ல குவியிணர்ப் புல்லிலை எருக்கமாயினும் உடையவை கடவுள் பேணேம் என்னா' என்னும் புறநானூற்றுப் பாடலடி (106) கொண்டு, அதன் பொருளை உணர்ந்தும் உணரார் போல சிலர் சங்க காலத்தில் பிள்ளையார் வழிபாடு இருந்ததாகக் கூறுவது பிழையாகும்(6). 'நல்லதென்றும், தீயதென்றும் வகைப்படுத்த இயலாத எருக்கம்பூ தரினும் தெய்வங்கள் அவற்றை மறுப்பதில்லை' எனும் பொருளமைந்த இப்பாடல், தெய்வங்களின் சார்பற்ற தன்மையைச் சுட்டுகிறதே தவிர, பிள்ளையார் வழிபாட்டை அல்ல. எருக்கம்பூ, சிவபெருமானால் விரும்பிச் சூடிக்கொள்ளப்பட்ட பூவாக அப்பர் பெருமானால் சுட்டப்படுவது நோக்க(7), பின்னாளிலேயே இது பிள்ளையாருக்கு உகந்த பூவாக மாற்றப்பட்டமை தெளிவாகும். எவ்வித அடிப்படைச் சுட்டலும் இல்லாத இப்பாடலடி கொண்டு, பிள்ளையார் வழிபாடு சங்க காலந்தொட்டே இருந்தது எனக் கூறுவார் கூற்று எவ்விதத்தானும் உண்மையாகாமை கண்கூடு.

தமிழ்நாடு முழுவதுமாய் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் இக்காலகட்டச் சான்றுகளைப் பலவாய்த் தந்திருந்தாலும், பிள்ளையார் வழிபாட்டைக் குறிக்கும் எத்தகு அடையாளங்களையும் இன்றுவரை தரவில்லை. தமிழ்நாட்டின் இயற்கைக் குகைத் தளங்களில் காணப்படும் இக்காலகட்டத் தமிழிக் கல்வெட்டுகளும் இது குறித்து மௌனமாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது(8).

சங்க காலத்தை அடுத்தமைந்த மூன்று நூற்றாண்டுகளில் (கி.பி 200 - கி.பி 500) தமிழ்நாடு தமிழர் கையிலிருந்து மாறிப் பல்லவர், களப்பிரர் வயமாயிற்று. இக்காலகட்ட வரலாற்றை அறிய பல்லவர்களின் பிராகிருத, வடமொழிச் செப்பேடுகளும் இலக்கியங்களும் உதவுகின்றன. பல்வேறு அறிவியல் பூர்வமான சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாடு, இலங்கை, ஜப்பான் சார்ந்த அறிஞர் பெருமக்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் முதலிய இலக்கியங்களை இக்காலகட்டம் சார்ந்தவை என அடையாளப் படுத்தியுள்ளனர். இவ்விலக்கியங்களுள், தமிழர் சமய வரலாறு குறித்து அரிய பல தரவுகளை உள்ளடக்கியிருக்கும் சிலப்பதிகாரம் புகாரிலும் மதுரையிலும் இருந்த இறைக் கோயில்களை வகைப்படுத்தியும் வரிசைப்படுத்தியும் காட்டுகிறது.

பிறவா யாக்கைப் பெரியோன் (சிவபெருமான்), அறுமுகச் செவ்வேள் (முருகன்), வாலியோன் (பலராமன்), நெடியோன் (திருமால்), இந்திரன், கொற்றவை, உமை, கதிரவன் எனப் பல்வேறு முதன்மைத் தெய்வங்களைச் சுட்டும் சிலப்பதிகாரம், தருக்கோட்டம், வெள்யானைக் கோட்டம், வேற்கோட்டம், வச்சிரக்கோட்டம் என இறை சார்ந்தவற்றிற்கு அமைந்த கோயில்களையும் காட்டுகிறது(9). சிறு தெய்வ வணக்கம் பற்றியும் விரித்துரைக்கும் இவ்விலக்கியத்தில் பேரூர் சார்ந்தோ சிற்றூர் சார்ந்தோ எவ்விடத்தும் பிள்ளையார் வழிபாடு பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு, கோயில்களைப் பற்றியும் இறைவழிபாடு பற்றியும் கூறினாலும் பிள்ளையார் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருக்காமை கருதத்தக்கது(10). இக்காலப் பகுதிக்கு உரியனவாக அடையாளம் காணப்பட்டிருக்கும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளிலும் பிள்ளையார் சுட்டல் இல்லை(11).

பிள்ளையாரை முதன்முதலாக அறிமுகப்படுத்தும் இலக்கியங்கள் அப்பர், சம்பந்தர் திருமுறைகளே. இந்த ஆறு திருமுறைகளிலும் அப்பரும் சம்பந்தரும் பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான இடங்களிலேயே குறிப்புத் தருகின்றனர். இப்பெருமக்களின் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் என அறிஞர் கொள்வர். இக்குறிப்புகளால், பிள்ளையார் சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டவர் என்பதையும் கயாசுரனைப் போரில் வென்றவர் என்பதையும் அறியமுடிவதுடன், அவரது தோற்றம் பற்றிய வண்ணனைகளையும் ஓரளவிற்குப் பெறமுடிகிறது.

உமை பெண் யானையின் வடிவம் கொள்ள, சிவபெருமான் ஆண் யானையின் வடிவம் கொண்டு இணைந்ததன் பயனாய்ப் பிறந்தவர் பிள்ளையார் என்பதை இரண்டு பதிகங்களால் விளக்குகிறார் சம்பந்தர். தம்மை வழிபடும் அடியவர்தம் இடர்களைத் தீர்ப்பதற்காக இறைவன் அருளிய கொடையே கணபதி என்று பிள்ளையாரின் பிறப்பிற்குக் காரணம் காட்டும் சம்பந்தர் (சம். 1: 123:5, 126:6), 'தந்த மதத்தவன் தாதை' (1:115:2), 'மறுப்புறுவன் தாதை' (1:117:8), 'கரியின் மாமுகமுடைய கணபதி தாதை' (2:232:3) என்று சிவபெருமானைச் சிறப்புச் செய்யுமாறு பிள்ளையாரின் தோற்றம் காட்டுகிறார்.

நாவுக்கரசர், சம்பந்தரின் கூற்றைக் 'கைவேழ முகத்தவனைப் படைத்தார்' (6:53:4), 'வினாயகர் தோன்றக் கண்டேன்' (6:77:8), 'ஆனைமுகற்கு அப்பன்' (6:74:7), 'கணபதி என்னும் களிறு' (4:2:5) எனும் பல்வேறு தொடர்களால் உறுதிப்படுத்துகிறார். கயாசுரனைக் கொல்லச் சிவபெருமான் பிள்ளையாரைப் பயன்படுத்திக் கொண்ட தகவலைத் தரும் நாவுக்கரசர், அதற்காகவே பிள்ளையார் பிறப்பிக்கப்பட்டார் எனக் கருதுமாறு பாடல் அமைத்துள்ளார் (6:53:4).

முருகப்பெருமானைப் பற்றி நாற்பத்தேழு இடங்களில் விதந்தோதும் இவ்விரு சமயக் குரவரும், பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான அளவிலேயே குறிப்புகள் தந்திருப்பதை நோக்க, இவர்தம் காலத்திற்குச் சற்று முன்னதாகவே பிள்ளையார் வழிபாடு தமிழ்நாட்டில் கால் கொண்டதாகக் கருதலாம்.

தமிழ்நாட்டில் இன்றைக்கும் காணப்படும் இறைக் கோயில்களுள் காலத்தால் பழமையானவை குடைவரைகளே. குன்றுகளைக் குடைந்தும், பாறைகளைச் செதுக்கியும் இத்தகு குடைவரைகள் அமைக்கப்பட்டன. வடதமிழ்நாட்டில் இத்திருப்பணியைத் தொடங்கியவர் பல்லவப் பேரரசரான முதலாம் மகேந்திரவர்மர். இவர் குடைவரைகள் எவற்றிலும் பிள்ளையார் சிற்பம் இடம்பெறவில்லை(12). திருக்கழுக் குன்றத்தில் உள்ள ஒருகல் மண்டபம் முதலாம் நரசிம்மவர்மரின் திருப்பணியாகக் கருதப்படுகிறது. இதிலும் பிள்ளையாரின் வடிவமில்லை. இராஜசிம்மரின் குடைவரைகளிலும் பிள்ளையாரின் சிற்பம் இறைவடிவமாகக் காட்டப்படவில்லை என்றாலும், மாமல்லபுரம் இராமாநுஜர் குடைவரையின் பூதவரியில் பிள்ளையார் இடம்பெற்றுள்ளார்.

இராஜசிம்மர் பணியான மாமல்லபுரம் தருமராஜர் ரதத்தின் பூதவரியிலும் பிள்ளையார் எனக் கொள்ளத்தக்க வடிவங்கள் இடம்பெற்றுள்ளன(13). இராஜசிம்மரின் கற்றளிகளில் கூடுகளிலும் கோட்டங்களிலும் பிள்ளையார் இடம்பெறத் தொடங்குகிறார். சிராப்பள்ளியிலுள்ள கீழ்க்குடைவரை(14), சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பட்டூர்க் கைலாசநாதர் கோயில்(15), செங்கற்பட்டு மாவட்டம் வல்லத்திலுள்ள கந்தசேனரின் குடைவரை(16), ஆகியவற்றில் பிள்ளையார் கோட்டத் தெய்வமாகக்(17) காட்டப்பட்டுள்லமை குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தைக் கி.பி எட்டாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியாகக் கொள்ளலாம். இதனால் வடதமிழ்நாட்டு இறைக்கோயில்களில், பிள்ளையாரின் சிற்பங்கள் சம்பந்தர், அப்பர் காலத்திற்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்குப் பிறகே இடம்பெறத் தொடங்கியமை தெளியப்படும்.

தென் தமிழ்நாட்டில் பாண்டியர், முத்தரையர் கைவண்ணமாகப் பிறந்த குடைவரைகள் பலவற்றில் பிள்ளை யாரின் சிற்பம் காணப்படுகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்கது பிள்ளையார்பட்டி(18). அங்குள்ள பிள்ளையார் இன்றைக்கு முதன்மைத் தெய்வமாக வழிபடப்பட்டாலும், உருவான காலத்தில் சிவபெருமானுக் கான குடைவரையின் முன், பக்கவாட்டில் விரியும் சுவரில் கோட்டத் தெய்வமாகச் செதுக்கப்பட்டவரே ஆவார். இக்குடைவரையில் இடம்பெற்றுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு, 'எக்காட்டூருக் கோன் பெருந்தசன்' எனும் பெயரைத் தருகிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இதை ஆறாம் நூற்றாண்டென்பர் அறிஞர்கள்(19).

இக்கருத்து ஏற்புடையதாயின் பிள்ளையர்பட்டிக் குடைவரையின் காலமும் ஆறாம் நூற்றாண்டாகிவிடும். எனில், தமிழ்நாட்டின் காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பமாகப் பிள்ளையார்பட்டிக் குடைவரைப் பிள்ளையாரையே கொள்ளவேண்டிவரும். குடைவரையின் அமைப்பு, சிற்பங்களின் செதுக்கு நேர்த்தி கொண்டு இக்குடைவரையின் காலத்தை ஏழாம் நூற்றாண்டாகக் கொள்வாரும் உண்டு. இரண்டில் எதை ஏற்பினும் இப்பிள்ளையாரே தமிழ்நாட்டின் காலத்தால் முற்பட்ட பிள்ளையார் என்பதில் ஐயமில்லை.

திருமலைப்புரம், செவல்பட்டி, தேவர்மலை, அரிட்டாபட்டி, மலையக்கோயில், திருக்கோளக்குடி, திருப்பரங்குன்றம், மலையடிப்பட்டி, குன்றக்குடி, கோகர்ணம் முதலிய பல பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில்(20) பிள்ளையார் சிற்பம் இடம் பெற்றுள்ளமையை நோக்க, தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு காலூன்றிய முதல் இடமாகப் பாண்டிய மண்ணையே கொள்ளவேண்டியுள்ளது. கி.பி ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளில் சிராப்பள்ளிக்குத் தெற்கே காலூன்றிப் பரவிய இப்பிள்ளையார் வழிபாடு எட்டாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில்தான் வடதமிழ்நாட்டிற்குள் குடிபுகுந்தது. எட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகும் தமிழ்நாட்டுச் சமய வரலாற்றில் முருகப்பெருமானுக்குக் கிடைத்த இடம் பிள்ளையாருக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை. பல்லவர், பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில் கோட்டத் தெய்வமாக இடம்பெற்ற பிள்ளையார், தொடக்கக் காலப் பல்லவக் கற்றளிகளில் ஆங்காங்கே இடம்பெற்றாலும், அபராஜிதர் காலக் கற்றளிகளில்தான் உள்மண்டபத் தென் கோட்டத் தெய்வமாக நிலைபெற்றார்(21). இந்நிலைபேறு சோழர் காலத்தில் உறுதியாக்கப்பட்டது.

சோழர் காலக் கற்றளிகளின் திருச்சுற்றில் சுற்றாலைக் கோயில்கள் உருவானபோது எண்பரிவாரத்துள் ஒன்றாகப் பிள்ளையாருக்கும் இடம் கிடைத்தது. திருச்சுற்றின் தென்மேற்கு மூலை பிள்ளையாருக்கு உகந்த இடமாக ஒதுக்கப்பட்டு அவருக்கெனத் தனித் திருமுன் அமைக்கப்பட்டது. இத்தகு பிள்ளையார் திருமுன்களைச் சோழர் கற்றளிகளிலும் பின்னால் வந்த பிற மரபுப் பேரரசுக் காலக் கற்றளிகளிலும் இன்றும் காணலாம்.

கோட்டத் தெய்வமாகவோ, சுற்றாலைத் தெய்வமாகவோ மட்டுமே அமைந்த பிள்ளையாருக்குத் தனிக்கோயில் அமைக்கும் பழக்கம் மிகப் பிற்பட்ட காலத்திலேயே ஏற்பட்டது. தமிழ்நாட்டுக் கோயில்களில் கிடைக்கும் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளும் அதையே உறுதி செய்கின்றன.

குறிப்புகள்

1. தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், நூற்பா எண். 5.

2. திருமுருகாற்றுப்படை, 258-259.

3. புறநானூறு, 6:18

4. கலித்தொகை, அனந்தராமையர் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, தஞ்சாவூர், ப.144.

5. கலித்தொகை, 38:1-5.

6. நடன காசிநாதன், தமிழகமும் கணபதி வழிபாடும், தாய் நாட்டிலும் மேலைநாடுகளிலும் தமிழியல் ஆய்வு, பக்.162-170.

7. 4:104:4; 5:95:5

8. Iravatham Mahadevan, Early Tamil Epigraphy, pp. 314-447.

9. சிலப்பதிகாரம், 5:169-173; 9:9-13

10. எ.சுப்பராயலு, எம்.அர். ராகவ வாரியர், பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள், ஆவணம் 1, பக். 57-69.

11. Iravatham Mahadevan, Early Tamil Epigraphy, pp. 450-537

12. மு.நளினி, இரா.கலைக்கோவன், மகேந்திரர் குடைவரைகள் ஓர் ஒப்பாய்வு, வரலாறு 11, பக். 57-82.

13. மு.நளினி, இரா.கலைக்கோவன், அத்யந்தகாமம், பக். 11-12.

14. மு.நளினி, இரா.கலைக்கோவன், சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை, வரலாறு 9,10, பக்.131-179.

15. இரா.கலைக்கோவன், கண்டறியாதன காட்டும் கைலாசநாதர், அமுதசுரபி தீபாவளி மலர் 1997, பக். 303-306.

16. இக்குடைவரை முதலாம் மகேந்திரர் காலத்தில் அவர் அடியாரான வயந்தப் பிரியரைசரின் மகன் கந்தசேனரால் குடைவிக்கப்பட்டது. குடைவரை குடையப்பட்டுள்ள பாறையின் வெளிப்புறத்தே வலப்பக்கம் கோட்டம் அகழ்ந்து பிள்ளையார் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. தோற்றம், செதுக்குநேர்த்தி கொண்டு இப்பிள்ளையார் வடிவம் குடைவரைக் காலத்ததா அல்லது பிற்காலத்தில் உருவாக்கப்பட்டதா என்பதை உறுதியாகக் கூறக்கூடவில்லை. இரண்டாம் நரசிம்மரான இராஜசிம்மப் பல்லவரின் தொடக்கக் காலக் கட்டுமானப் பணிகளில்தான் பிள்ளையார் வடிவத்தைப் பூதவரிகளில் காணமுடிகிறது. அவர் காலக் கற்றளிகளில் பிள்ளையார் கோட்டத் தெய்வமாக இடமாற்றம் பெறுகிறார். பல்லவர் கைவண்ணமான சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை முருகன், கொற்றவை, சூரியன், நான்முகன் ஆகிய தெய்வங்களுக்கு இணையான தெய்வமாகப் பிள்ளையாரைச் சமநிலையில் நிறுத்திப் பெருமைப்படுத்தியுள்ளது. காலநிரலான இப்பரிணாம வளர்ச்சியைக் காணும்போது, வல்லம் குடைவரைப் பிள்ளையாரைக் குடைவரைக் காலத்திற்குச் சற்றுப் பிற்பட்டவராகவே கொள்ளவேண்டியுள்ளது. வல்லத்துக் குன்றில் இலக்கசோமாசியார் மகள் எடுத்துள்ள இரண்டாம் குடைவரையின் முகப்பிற்கு முன் விரியும் பக்கச் சுவரில் ஒரு பிள்ளையார் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. அதையும் கி.பி எட்டாம் நூற்றாண்டுப் படைப்பாகவே கொள்ளலாம்.

17. 'வல்லத்தில் மகேந்திரவர்மன் காலத்தியதாகக் கருதப்படும் குடைவரைக் கோயிலில், ஒரு சன்னதியின் முன்பாக உள்ள இரு தூண்களில் ஒன்றில் கணபதியின் உருவமும் மற்றொன்றில் சேட்டையின் சிற்பமும் செதுக்கப்பட்டிருக்கின்றன' எனும் நடன காசிநாதனின் கூற்று, அவர் வல்லம் குடைவரையைப் பார்க்காமலேயே கட்டுரைத்துள்ளமையைத் தெளிவுபடுத்துகிறது. தமிழகமும் கணபதி வழிபாடும், தாய்நாட்டிலும் மேலைநாடுகளிலும் தமிழியல் ஆய்வு, ப.167.

18. இரா.கலைக்கோவன், பிள்ளையார்பட்டிக் குடைவரை, அமுதசுரபி தீபாவளி மலர், 2000, பக். 82-86.

19. Iravatham Mahadevan, Early Tamil Epigraphy, pp. 475-675; பிள்ளையார்பட்டிப் பிள்ளையாரையும் இக்கல்வெட்டையும் பற்றிக் குறிப்பிடும்போது நடன காசிநாதன், 'பிள்ளையார்பட்டியில் காணப்பெறும் குடைவரைக்கோயிலில் ஒரு பழமையான கல்வெட்டும், கணபதியின் புடைப்புச் சிற்பமும் அருகருகே காணப்பெறுகின்றன' என்று தவறான தகவல் தந்துள்ளார். தமிழகமும் கணபதி வழிபாடும், தாய்நாட்டிலும் மேலைநாடுகளிலும் தமிழியல் ஆய்வு, ப.166. பிள்ளையார் சிற்பம் சிவபெருமான் குடைவரையின் வடபுறம் உள்ள பாறைச்சுவரில் ஹரிஹரர் சிற்பத்தை அடுத்துச் செதுக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் குடைவரைக்குத் தென்புறம் விரியும் கிழக்குச் சுவரில் உள்ள அரைத்தூணில் பெருந்தசன் கல்வெட்டுக் காணப்படுகிறது.

20. அர.அகிலா, இரா.கலைக்கோவன், திருமலைப்புரம் குடைவரை, வரலாறு 6, பக். 118-134;
சீ.கீதா, இரா.கலைக்கோவன், செவல்பட்டிக் குடைவரை, வரலாறு 4, பக்.25-38;
அர.அகிலா, தேவர்மலைக் குடைவரை, வரலாறு 3, பக். 57-66;
மு.நளினி, இரா.கலைக்கோவன், அரிட்டாபட்டிக் குடைவரை, பதிப்பிக்கப்படாத கட்டுரை;
மு.நளினி, இரா.கலைக்கோவன், மலையக்கோயில் குடைவரைகளும் கல்வெட்டுகளும், வரலாறு 11, பக். 159-174;
மு.நளினி, இரா.கலைக்கோவன், பரங்குன்றம் குடைவரை, பதிப்பிக்கப்படாத கட்டுரை;
ம.ஜான்சி, மு.நளினி, இரா.கலைக்கோவன், மலையடிப்பட்டிக் குடைவரைகளும் கல்வெட்டுகளும், வரலாறு 4, பக்.64-115;
அர.அகிலா, மு.நளினி, குன்றக்குடிக் குடைவரைகளும் கல்வெட்டுகளும், வரலாறு 2, பக். 56-106;
மு.நளினி, இரா.கலைக்கோவன், திருக்கோளக்குடிக் குடைவரையும் கற்றளிகளும், வரலாறு 6, பக். 134-168;
மு.நளினி, இரா.கலைக்கோவன், கோகர்ணம் குடைவரையும் கல்வெட்டுகளும், பதிப்பிக்கப்படாத கட்டுரை.

21. மு.நளினி, இரா.கலைக்கோவன், அபராஜிதர் காலக் கற்றளிகள், பதிப்பிக்கப்படாத கட்டுரை.

ராவணன் பாலம்?

சர்ச்சைக்குறிய ராமர் பாலம் பற்றி பலரும் எழுதியுள்ளார்கள். என் பங்குக்கு நானும் எழுதாவிட்டால் தமிழினத் துரோகியாகும் வாய்ப்புள்ளது. இதுபற்றி அத்வானியுடன் நடந்த நேர்காணல்!

அதிரைக்காரன்: வாங்க அத்வானி ஜி. நல்லா இருக்கீங்களா?

அத்வானி: நமஸ்தே அதிரைக்காரன்ஜி. நல்லா இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க?

அதிரைக்காரன்: (உங்கள் ஆட்சி போனதிலிருந்து) நல்லா இருக்கிறேன் ஜி.

அத்வானி: பேட்டியை எங்கு வைத்துக் கொள்வோம்? உங்களூர் ராஜாமடம் பாலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷை பேட்டி கண்டிருக்கிறீர்கள் என்று புஷ் பெருமையாகச் சொன்னார். அங்கேயே வைத்துக் கொள்ளலாமா?

அதிரைக்காரன்: இல்லை. உங்களுக்குப் பிடித்த ராமர் பாலத்தில் காலாற நடந்து கொண்டே பேசலாமே.

அத்வானி: (திடுக்கிட்டு) என்ன விளையாடுறீங்களா? ராமர் பாலம் எங்கிருக்கிறது? இருந்தாலும் அதன்மீது எப்படி நடக்க முடியும்?
அதிரைக்காரன்: இராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருப்பதாக ஜெயலலிதா அம்மையார், சுப்ரமணியசுவாமி மற்றும் உங்கள் கட்சிக்காரர்கள் சொல்லி வருகிறார்களே?

அத்வானி: அடப்போங்க அதிரைஜி. அவங்களுக்கு அரசியல் பண்ண வேறு விசயம் எதுவும் கிடைக்கவில்லை.அதனால்தான் ராமர் பாலம் விசயத்தைக் கையிலெடுத்துள்ளார்கள்.

அதிரைக்காரன்: அப்படியா! நான் கூட ஏதோ உண்மையான பாலம்தான் இருக்குதோ என்று நினைத்து விட்டேன். ஆமா! ராமர் பாலம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

அத்வானி: இதென்ன கேள்வி. அவர்களுக்கு எதிராகக்கருத்துச் சொல்ல எனக்கு என்ன செலக்டிவ் அம்னீஷியா? ராமர் பாலம் 17 இலட்சத்து ஐம்பதாயிரம் வருஷத்துக்கு முன்னாடி கட்டப்பட்டது. இந்தியாவின் பாரம்பரிய சின்னங்கள் காக்கப்பட வேண்டும் என்பதால்தான் நாங்களும் ராமர்பாலத்தை இடிக்கக் கூடாது என்கிறோம்.

அதிரைக்காரன்: "இடிக்கக்கூடாது" என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?

அத்வானி: ஆம்! இந்தியாவின் பாரம்பர்யச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

அதிரைக்காரன்: உங்களால் இடிக்கப்பட்ட பாபர் மசூதியும் நம்நாட்டின் பாரம்பரிய சின்னம் தானே அதை ஏன் இடித்தீர்கள்?

அத்வானி: பழசை ஏன் கிளருகிறீர்கள்? வேறு ஏதாவது புதுசாகக் கேளுங்கள்.

அதிரைக்காரன்: 400 வருடங்களுக்கு முந்தைய பாபர் மசூதியை 15 வருடங்களுக்கு முன் இடித்தது பழைய விசயமா உங்களுக்கு? 17,50,000 வருடப் பாலம் மட்டும் புதிய விசயமா? நானூறு வருடங்கள் பழையதா 17,50,000 வருடங்கள் பழையதா?

அத்வானி: அதிரைஜி. கடலுக்கடியில் பாலம் இருப்பதை அமெரிக்காவின் நாஸா விண்வெளி மையம் சமீபத்தில் உறுதி படுத்தியுள்ளது. தெரியுமா?

அதிரைக்காரன்: விண்வெளியில் தினமும் புதுசு புதுசா கண்டுபிடிப்பதும், ஏற்கனவே கண்டு பிடித்தவை மறுக்கப்படுவதும் சகஜம். கடலுக்கடியில் இருப்பது ராமர் பாலம்தான் என்று நாஸா சொன்னதாக யார் சொன்னார்?

அத்வானி: பார்த்தீங்களா! நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள். தினமலரில் படங்களுடன் இது பற்றி செய்தி வெளியிட்டிருந்தார்களே.

அதிரைக்காரன்: நாஸாவின் குறிப்பின்படி இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும் மணற்திட்டுகள் முன்பு பாலமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்றுதானே சொல்லப் பட்டுள்ளது.

அத்வானி: நாஸாவிற்கு ராமாயணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவேதான் மணல் திட்டு என்று புரியாமல் சொல்லியுள்ளார்கள். நாங்கள் அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால் நாஸாவில் உள்ள விஞ்ஞானிகள் ராமாயணம் படிக்க ஏற்பாடு செய்வோம். பாரதத்தின் நன்மைக்காகச் சொல்லப்படும் எதையும் ஒப்புக் கொள்ளலாம்.

அதிரைக்காரன்: சேது சமுத்திரத் திட்டத்தால் பாரதத்திற்கு பொருளாதார நன்மைகள் உள்ளதை ஒப்புக் கொள்கிறீர்களா?

அத்வானி:தேவையில்லாமல் அடுத்தவர் மத நம்பிக்கைகளுடன் நீங்கள் விளையாடக் கூடாது. ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு இடைப்பட்ட பாலம் அனுமாரால் கட்டப்பட்டது.

அதிரைக்காரன்: மண்டபத்திலிருந்து ராமேஸ்வரத்தை இணைக்கும் பாம்பன் பாலம் ஆங்கிலேயரால் 1911 இல் கட்டப்பட்டது.


கடலில் இயற்கையாக தோன்றி மறையும் மணல் திட்டுகளை பாலம் என்று சொல்வது சரியல்ல. எங்களூர் கடலில்கூட சில வருடங்களுக்கு முன் ராஜாமடம் ஆறு கலக்குமிடத்தில் மணற்திட்டு ஏற்பட்டு சிறிய தீவு போல இருக்கிறது. உலகின் பெரும்பாலான தீவுகள் மணற்திட்டுகளால்தான் ஏற்படுகின்றன.

அத்வானி: அதிரைஜி, கடலியல் பூகோல மாற்றங்களை நீங்கள் அறியாமல் பேசுகிறீர்கள். பல இலட்சம் வருடங்களுக்கு முன் இலங்கை இந்தியாவின் பகுதியாகவே இருந்தது. இடையில் கடல்புகுந்து இலங்கையை தனித்தீவாக மாற்றிவிட்டது.மேலும், பூமித் தட்டுக்கள் நகரும்போது நிலப்பரப்பிலும் கடற்பரப்பிலும் மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஏற்பட்ட மாற்றங்களால்தான் நம்நாட்டின் இமயமலை கூட உயர்ந்ததாகச் சொல்கிறார்கள். அப்புறம், உங்களூர் பெயரிலும் "ராம்" என்று என்று உள்ளதால் தேவைப்பட்டால் அதை பிறகு பேசிக்கொள்வோம். :-(

அதிரைக்காரன்: இதே லாஜிக்படி பார்த்தால் நீங்கள் இடித்த பாபர் மசூதி இருந்த பகுதியில் ராமர் பிறந்திருக்க வாய்ப்பில்லைதானே? பூகோல மாற்றங்களால் நில,நீர்ப்பரப்புகள் மாறும் போது, வட இந்தியாவில் சரயு நதியின் ஓட்டமும் ஏன் மாறி இருக்காது? அதன்படி, நீங்கள் சொல்லும் ராமர் பிறந்த இடம் தற்போதைய சரயு நதிக்கரையிலுள்ள அயோத்தி அல்ல என்றுதானே அர்த்தம்.

அத்வானி: நீங்கள் மீண்டும் மீண்டும் பழசைக் கிளறுகிறீர்கள். "ராமர்பாலம் பாதுகாப்பு" இயக்கத்திற்கு வந்துள்ள கரசேவகர்களைச் சந்திக்க வேண்டும். பேட்டியை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

அதிரைக்காரன்: கரசேவகர்கள் கரத்தில் கடப்பாறையுடன் வந்துள்ளார்களே? வந்திருப்பது இடிக்கவா அல்லது கட்டவா?

அத்வானி: (திடுக்கிட்டு) தவறு நடந்துவிட்டது! "ராமர் பாலம் பாதுகாப்பு இயக்கம்" என்றதும் இவர்கள் பாலத்தை இடிக்க வேண்டுமோ என்று தவறாகப் புரிந்துகொண்டு கடப்பாறையுடன் வந்துள்ளார்கள். பேட்டியை சீக்கிரம் முடியுங்கள், அவசரப்பட்டு இடித்து விடபோகிறார்கள்.

***********************************
தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள மூன்று மாநிலங்கள் நதிநீர் ஆதாரங்களைத் தடுக்கிறார்கள். யாராலும் தடுக்க முடியாத கடல்நீர் ஆதாரங்களை வைத்து மாநிலத்தையும் நாட்டையும் முன்னேற்ற முயலும்போது ராமர் பாலம் என்ற பெயரால் சிலர் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

ராமர் பாலத்தால் நன்மையடைந்தவர்கள் ஜெயலலிதாவும் இலங்கையும் மட்டுமே. ராமர் பாலம் எதற்கும் பயன்படாவிட்டாலும் எதிர்காலத்தில் ஜெயலலிதாவுடன் பி.ஜே.பி உறவுப் பாலம் அமைக்க நிச்சயம் பயன்படலாம். தமிழகம் மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் இப்பாலத்தை ராவணன் பாலம் என்பதே சரி.

ராமர் சார்! ஒரேயொரு வரம் தரவேண்டும். அதுவும் நம்நாட்டின் முன்னேற்றத்திற்காக மறுக்காமல் தர வேண்டும். அதாவது எங்களுக்காக மீண்டும் ஒரேயொரு முறை பதிமூன்று வருடங்கள் மட்டும் உங்கள் பரிவாரங்களுடன் வனவாசம் சென்று வந்தால் போதும்; நீங்கள் திரும்பி வருவதற்குள் நாங்கள் வல்லரசாகி இருப்போம்.

கொஞ்சம் பெரிய மனதுடன் இந்த உதவியைப் பண்ணுங்களேன். ப்ளீஸ்! :-)

அறிஞர் போற்றிய அருந்தமிழ்



குமரிக்கண்டத்திலிருந்து தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளை இந்த வரைபடம் காட்டுகிறது. இது 3000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிப்போன தமிழர் வரலாறாகும்



1. டாக்டர் ஜி.யு.போப் (DR.G.U.POPE) அவர்கள் தமிழைப் படித்து , தமிழிலே உள்ள கருத்துகளை ஆய்ந்தறிந்து, இந்த மொழி உயர்ந்த மொழி; இது ஒரு செம்மொழி என்றெல்லாம் எடுத்துக்கூறினார் . ஜி.யு.போப் அவர்கள் 50 ஆண்டுகாலம் தமிழுக்குத் தொண்டு செய்தவர் . அவர் மறையக்கூடிய இறுதி நேரத்தில் தம்முடைய கல்லறையில் "இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்" என்று எழுதச் சொன்னவர் . கிறித்துவ சமயத்தைப் பரப்புவதற்காகத் தமிழ் நாட்டுக்கு வந்தவர் தமிழ்த்திருவாசகத்தைப் படித்துவிட்டு "எலும்பை உருக்கும் பாட்டு திருவாசகம் " என்று உருக்கத்தோடு கூறியுள்ளார்.



2. பெர்சிவல் பாதிரியார் (REV.PERCIVAL) அவர்கள் தமிழைக் கற்றுணர்ந்தபின் "ஆற்றல்மிக்கதாகவும் சொல்லவந்த பல கருத்துகளைச் சில சொற்களால் புலப்படுத்தும் தன்மையும் தமிழ்போல் வேறு எம்மொழியிலும் இல்லை " என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

3. டாக்டர் ரோபர்டு கால்டுவெல் (DR.ROBERT CALDWELL) அவர்கள் தமிழை ஆய்ந்துபார்த்தும் பிறமொழிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தும் தமிழ் தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது ; பிறமொழி துணையின்றி இயங்கவல்லது; இந்திய மொழிகளில் தமிழ் தனிச்சிறப்பு வாய்ந்தது என்று கூறியுள்ளார்.

4. கமில் சுவெலபில் (KAMIL ZVELEBIL) என்பவர் செக்நாட்டுத் தமிழ் அறிஞர். தமிழில் உள்ள ஏடுகளை எல்லாம் ஆய்ந்துபார்த்தும் சிலப்பதிகாரத்தை ஆய்ந்துபார்த்தும் தமிழின் உண்மையை ; மேன்மையை உலகறியச் செய்தவர்.

5. ஈராசுப் பாதிரியார் (FATHER HERAS) என்ற இசுபெயின் நாட்டு அறிஞர் இந்தியாவில் நீண்டகாலமாக வரலாற்று ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டவர் . கடல்கொண்ட குமரிக் கண்டத்தில் தோன்றிய தமிழர் நாகரிகம்தான் தென்னாட்டின் திரவிட நாகரிகமாக மலர்ந்து, சிந்துவெளி (அராப்பா - மொகஞ்சதாரோ) நாகரிகமாக மிளிர்ந்து, பின்னர் சுமெரியர் - எகுபதியர் - கிரேக்கர் - உரோமானியர் - ஐரோப்பியர் நாகரிகரிகங்களாக மாறின என்று தம் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தினார் .

6. ஆல்பர்ட் சுவைட்சர் (ALBERT SWITZER) என்ற செருமானிய மெய்யியல் அறிஞர் ஏசுநாதரின் மறுபிறவி என்ற புகழுடன் வாழ்ந்தவர். அவர் திருக்குறளில் மனம் தோய்ந்து பல குறட்பாக்களை மனப்பாடம் செய்திருந்தார். "சீரிய கோட்பாடுகளின் தொகுப்பான திருக்குறளில் காணப்படும் அத்துணை உயர்ந்த ஞானம் உலக இலக்கியத்தில் வேறு எந்த நூலிலும் இல்லை " என்று சொல்லிச் சென்றுள்ளார்.

7. கவியரசர் இரவிந்திரநாத் தாகூர் (RABINDRANATH TAGORE) என்பவர் புகழ்பெற்ற வடநாட்டுப் பாவலர். திருக்குறளைப் படித்தபின் அவர் கூறியதாவது , "பாரத நாடு முழுவதற்கும், ஏன் உலகம் முழுவதற்குமே மகான் வள்ளுவரின் கோட்பாடு பொருந்தும்". தமிழில் தோன்றிய திருக்குறளை அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார் .

8. மாக்சு முல்லர் (MAX MUELLER) என்ற செருமானிய நாட்டுக்காரர் தலைசிறந்த மொழிநூல் வல்லுநராக விளங்கியவர். இவர் "தமிழ் மிகப் பண்பட்ட மொழி; தனக்கே உரிதாக இயல்பாய் வளர்ந்த சிறந்த இலக்கியச் செல்வமுள்ள மொழி" என்றார்.

9. வீரமாமுனிவர் எனும் பெசுகி பாதிரியார் (FATHER JOSEPH BESCHI) என்பார் இத்தாலி நாட்டிலிருந்து வந்த கிறித்துவ மதகுரு. பிரெஞ்சு, இலத்தின், கிரேக்கம், இப்ரு, இத்தாலி, பாரசீகம், ஆங்கிலம், வடமொழி ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார் இவர் 20 ஆண்டுகள் தமிழ்ப் பயின்றார். இவரே தமிழில் முதன் முதலில் அகராதியை எழுதி வெளியிட்டவர். திருக்குற¨ளைக் கற்று அதன் சிறப்பில் தோய்ந்துபோய் இத்தாலியில் மொழிபெயர்த்தார். தமிழில் உரைநடை இலக்கியம் வளர்வதற்கும்; தமிழில் நிறுத்தக்குறிகள் புகுவதற்கும் இவர்தான் முன்னோடி.

10. மகாத்மா காந்தி (MAHATMA GHANDHI) உலகிற்கு அகிம்சையைக் கற்பித்துச் சென்ற இவருக்கு அந்த அகிம்சையைக் கற்றுகொள்ள தூண்டுகோளாக இருந்தது திருக்குறள்தான் . திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழைக் கற்றவர். அதனைக் அவரே இப்படி கூறியுள்ளார் "திருக்குறளை அதன் மூலத்திலிருந்து கற்பதற்காகவே நான் தமிழைக் கற்றேன் ".

11. சுவாமி விவேகானந்தர் (SWAMI VIVEKANANDA) என்ற ஞானி இளமையிலேயே துறவுகோலம் பூண்டு இந்தியாவின் இமயம் தொடங்கி குமரி வரை பயணம் செய்து பின்னர் அமெரிக்கா வரையில் சென்று ஆன்மிகக் கருத்துகளைப் பரப்பியவர் . "ஆரிய இனம் தோன்றுவதற்குத் தாய் இனங்களில் ஒன்றான தமிழினத்தின் இரத்தம் நம் உடலில் ஓடுகின்றது என்பது நமக்குப் பெருமை அளிப்பதாகும்" என்றும் "இந்திய நாட்டின் ஞானநெறி தென்னாட்டிலிருந்து நமக்குக் கிடக்கப்பெற்றதாகும்" என்றும் இவர் சொல்லியிருக்கிறார்.

12. பேராசிரியர் ஜோர்ஜ் எல்.ஆர்ட் (Prof. George L.Hart) என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியரான இவர் அண்மையில் சொல்லியிருக்கும் கூற்றே வாழும் நற்சான்றாக இருக்கின்றது . இவர் சமஸ்கிருதம், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர். கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டபோது " தமிழ் உலகின் மிகச் சிறந்த இலக்கியங்களையும் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் கொண்ட செம்மொழியாகும். ஒரு மொழி செம்மொழி (Classical Language) ஆகவேண்டுமானால் அது சில அடிப்படையான தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் . அந்த அத்தனைத் தகுதிகளையும் தமிழ்மொழி பெற்றுள்ளது" என இவர் கூறியுள்ளார்.

இவர்களோடு

, டாக்டர் வின்சுலோ (DR.WINSLOW), இரைசு டேவிட்டு (RHYS DAVIDS), டாக்டர் பிலியோசா (DR.FILIOZAT), கில்பர்ட்டு இசுலெட்டர் (GUILBERT SLATER), பேராசிரியர் பரோ (PROF.T.BURRO), பேராசிரியர் பானர்ஜி (PROF.R.D.BANERJI) கே.எம்.முன்சி (K.M.MUNSHI), போன்றோர் தமிழைக் கற்றும் - தெளிந்தும் - ஆய்ந்தும் பல உண்மைகளை வெளிப்படுத்திக்காட்டி தக்க ஆய்வுச் சான்றுகளோடு தமிழின் தொன்மை; தலைமை ; தெய்வத்தன்மை; உண்மையை நிறுவியுள்ளனர். தமிழின் சிறப்புகளைத் தமிழர் அல்லாத மேற்கண்டோர் உணர்ந்துள்ளது போல நம் தமிழர்கள் எத்தனைபேர் உணர்ந்துள்ளனர்? அப்படியே உணர்ந்தவர்களில் தமிழுக்காக உண்மையாய் உழைப்பவர்கள்தாம் எத்தனை பேர் ?தமிழராய் பிறந்ததற்காகப் பெருமைபடுவோம்! தமிழை வளர்ப்பதற்காகப் பாடுபடுவோம் ! தமிழனால் தமிழுக்கு வாழ்வு உண்டானால்... தமிழால் தமிழனுக்கும் வாழ்வு உண்டாகும் !


முதற்பதிவைக் காண்க:-


தமிழ்ப் பரப்பும் தங்கள் பணிசிறக்க நல்வாழ்த்து!

அன்புடன்;

சுப.நற்குணன்,

திருத்தமிழ் - மலேசியா.