இலக்கியத்தில் வீடு பேறு!


                                                                  இலங்கிடும் இலக்கியத்தில் வீடு பேறு!


வாழ்க்கையின் குறிக்கோள் வீடு பேற்றை அடைவதாகும். உலகியலிருந்து முற்றிலும் மாறுபட்டது வீடு பேறு. உலகியலைத் துறந்து வீடு பேற்றை அடைய வேண்டும் என்பாரும், உலகியலில் இருந்து கொண்டே வீடு பேற்றை அடைய முடியும் என்பாரும் உளர். இவ்விருவரின் கருத்தும் இரண்டு துருவங்களாக இருந்தாலும், உலகியல் வாழ்க்கைக்கும் வீடு பேற்றிற்கும் கருவியாக அமைவன பொருளியல் நூல்கள். அப்பொருளியல் நூல்களில் சிறந்தவை அகப்பொருள், புறப்பொருள் என்பவையாகும். அவற்றுள், அகப்பொருள் செய்யுள்கள் உலகியல் வாழ்வை இனிதுரைக்கிறது. உலகியல் என்பது நிலையாத்து! என்பதை நன்குணர்த்தி வீடு போற்றின்பத்தை நுகரச் செய்யும் கருவியாக அமைகிறது.

காதலியைக் காதலித்தால் உலகின்பம்
கடவுளைக் காதலித்தால் வீட்டின்பம்

காதலர்களாகிய தலைவனையும் தலைவியையும் தனித்தனியே இருவர் என்றோ இரண்டு உடல் என்றோ இரண்டு உயிர் என்றோ சொல்லாமல், ‘இரு வேறு உடல்களில் வாழ்கின்ற ஓர் உயிர்'
 
“இருதலைப் புள்ளின் ஓருயிரம்மே” - (அகம். செய். 12)
என்கிறது, தமிழ் இலக்கியம்.

தமிழ்ப் பண்பாட்டிற்கும் நாகரிகத்திற்கும் நிலைக்கலனாக விளங்கும் தொல்காப்பியம்,

“காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொழ்டு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”

- தொல்காப்பியம். கற்பியல்.1138

(இல்லற வாழ்க்கையினை நிகழ்த்திய தலைவன் தலைவி என்னும் இருவரும் தாம் விரும்பிய இன்பங்களையெல்லாம் நுகர்ந்து மனநிறைவு பெற்று இறுதிக் காலத்து, பெருமை பொருந்திய மக்களுடன் நிறைந்து, அறத்தினை விரும்பிய சுற்றத்தோடு சிறந்ததாகிய செம்பொருளை இடைவிடாது நினைத்து அதன் வழி நடந்து நன்னெறியில் பழகுதல் என்பது, இதுகாறும் மேற்கொண்டிருந்த மனையறத்தினால் அடையக்கூடிய முடிந்த பயனாகும் என்பர் உரையாளர்கள்.)

சிறந்தது பயிற்றல் என்பது – இல்லத்தின் வாயிலாக, நிலையாதவற்றைத் துறத்தல் என்பது பொருளாகும். இவ்வொழுக்கம் தலைவனும் தலைவியும் ஒருங்கிருந்து மேற்கொள்ளும் ஒழுக்கமாகும். எனவே, பண்டைத் தமிழர் கூறிய துறவறம் என்பது மனைவி, மக்கள், பொருள்கள் போன்றவற்றைக் கைவிட்டு நீங்குவது அன்று. பொருள்கள் நிலையாதவை என்பதை உணர்ந்து அவற்றின்பால் கொண்ட அவாவைத் துறப்பதே துறவறமாகும்.

பண்டைய தமிழ்ச் சான்றோர்கள் அறத்தை உரைத்தார்கள். அவர்கள் கூறிய அறத்தில் இல்லறமும் துறவறமும் இருக்கின்றன. அறத்தினால் பெறக்கூடியதே இன்பம் என்றனர். அந்த இன்பமே உலக இன்பத்தையும் வீட்டின்பத்தையும் தருவதாகும். நிலையில்லாத உலக இன்பத்தை அடைந்து, வாழ்வாங்கு வாழ்ந்து, மெய்யுணர்வுப் பெற்று பேரின்ப நிலைக்குச் செல்ல வேண்டும்! என்று, அறிந்திருந்தார்கள்.

“இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்”

என்னும் குறள், வீடு பேற்றை, பேரின்பத்தை உணர்த்துகிறது.

இருதலைப் புள்ளின் ஓருயிர் போலத் தலைவனும் தலைவியும் அன்புற்று காதலால் முதிர்ந்து இன்புற்று எய்தும் நிலையே பேரின்பமாகும்.

தமிழ் மொழியிலமைந்த அகத்துறை செய்யுள்கள் அனைத்தும் மேலெழுந்த வாரியாக நோக்கும் போது, உலகியலாகிய சிற்றின்பத்தைக் கூறுவன போலத் தோன்றும். ஆழ்ந்து அகன்று நோக்கி உணர்ச்சியுடன் உணர்ந்தால் அவை பேரின்பம் தரும் திருவருள் பாக்களாகக் காட்சியளிப்பதைக் காணலாம்.

“அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் – விரும்பிப்
பெறுநசையாற் பின்னிற்பார் இன்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை”
- (நாலடியார். 381)