பட்டி மன்ற வரலாறு. -முனைவர் இர.வாசுதேவன்

1. பழந்தமிழர் தம் கருத்தை மற்றோர்க்கு அறிவிக்க கருத்துப் போர் நிகழ்த்தியதாகத் தெரிகிறது. அது, பொது இடங்களில் பல்லோர் முன்னிலையில் நிகழ்ந்திருக்கிறது.

ஊரம்பலங்களை மரங்களினால் மூடி நிழல் பரப்புங்கள்! விழா அரங்கங்களில் இன்பம் பொங்கும் நல்லுரை ஆற்றுங்கள்! உரையாற்றும் வல்லமை கொண்டோ ரெல்லாம் உரையாற்றுங்கள்! சமயங்கள் கூறும் தத்துவங்களை காதலர்களுக்கு விளக்கிக் கூறுங்கள்! கருத்துகளுக்குக் கருத்துகளை எடுத்துக் கூறி வாதிடுங்கள்! வாதத்தை வாதத்தால் வாதிட்டு, வாதத்தைத் தீர்த்து வையுங்கள்! என்று, தொடிதோட்செம்பியன், அரசாணை வெளியிட்டான். இது, முதற் சங்க காலத்தில் நிகழ்ந்த நிகழ்வாகக் கருதுவர்.
பட்டிமன்றம் என்பது,

"பல்கேளிவித் துறை போகிய
தொல்லாணை நல்லாசிரியர்
உறழ்குறித் தெடுத்த உடுகெழு கொடியும்"

மாறுபட்ட கருத்தை உரைப்பது என்னும் பொருளில், பட்டினப்பாலை உரைக்கிறது.

அக்காலத்தில் பட்டிமன்றங்கள், அரசுத் தலைநகரங்களிலும், பெரு நகரங்களிலும், பொது விழாக்களிலும் நடைபெற்றுள்ளன . ஒரு நிகழ்வை அறிவிக்கும் மதுரை மாநகரம், பின்வருமாறு முரசு அறைந்தது. "பெருஞ்செய் ஆடவர் தம்மின்; பிறரும் யாவரும் வருக! ஏனோரும் தம்" என்று, மதுரைக் காஞ்சி கூறுகிறது.

பனம்பரனார் இயற்றிய இலக்கண நூலான பனம்பாரத்தில் காணப்படும் ஒரு சூத்திரத்தில், 'மன்னிய அவையிடை வெல்லுறு போதினும்' என்று குறிப்பு, சொற்போரிட்டு வெல்லும் நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது. இக்கருத்து, இன்றைக்கு 3500 ஆண்டுகட்கு முற்பட்டது.

'ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்'

என்று , மணிமேகலை குறிப்பிடுகிறது.

சொற்போர் நிகழ்த்துவதற்கு உரிய கருத்துகளை வள்ளுவம் ஒரு அதிகாரமாகக் கூறுகிறது. சொற்போர் நிகழ்த்துவோரைச் ' சொல்லேர் உழவர் ' என்கிறது. நூலைக் கற்றவன் அவைக்கு அஞ்சினால், அவனைப் பேடியின் கையிலுள்ள வாளை' உவமை யாக்குகிறது. மதுரைக் காஞ்சியில் "கம்பலை" என்னும் சொல் ஆளப்படுகிறது. அது, பட்டிமன்றங்களில் எழுந்த ஆரவாரம் என்று பொருள் கூறுகின்றனர்.

"கல்வி பயில்களம் பட்டிமண்டபம்" என்று பிங்கல நிகண்டு (663) பொருள் உரைக்கிறது .

பட்டிமன்ற நெறிகளை அவிநயம் என்னும் பழந்தமிழ் நூல் உரைக்கிறது. அவையில் வாது செய்வோர் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதைத் தெளிவாக உரைக்கிறது . அதாவது,

அவைபுகும் நெறியே ஆயுங்காலை எனத் தொடங்கி,

அவையில் கூறவேண்டியவற்றை அவையில் புகும் முன்னரே ஓர் ஒழுங்கு வரிசைப் படுத்திக் கொள்ளவேண்டும்.

பேச எழும்போது இருவரும் ஒன்றாக எழக்கூடாது.

பேசப் புகுந்தவன் கருத்து தோல்வியுறுதலும் உண்டு. இந்த உண்மையையும் எதிர்பார்த்தே புகவேண்டும்.

இருவரும் கூடி உடன் பட்டு நிறைவு பெற வேண்டும். இதனையும் முன் எண்ணமாகக் கொள்ள வேண்டும்.

'தெரிவுடன் உணர்ந்தோர் செப்பினர்' என்று முடிக்கிறது.

அவையடக்கம் பற்றி ஆங்காங்கே கிடைக்கும் செய்தி:

அவையில் பேசுவோர் அவைக்கு அடங்கி வணக்கம் சொல்லுதல் வேண்டும். இது, அவை அடங்கியல் எனப்பட்டது. ( தொல்காப்பியம்) "(யான்) அறியாதன சொல்லினும் (அவையோர்) பாகுபடுத்திக் கோடல் வேண்டும். என ( அவையிலுள்ள) எல்லா மாந்தர்க்கும் தாழ்ந்து கூறல் என்று நச்சினார்க்கினியர் விளக்குகிறார்.

பேசுவோர் எழுந்து நின்று பேசுதல் (சிலம்பு)

ஒருவர் பேசும் போது மற்றவர் பேசாமை (நாலடியார்)

இகல் இல்லாதவராக எஃகு போன்ற கருத்து உறுதி கொள்ளுதல் (நாலடி)

அதிரப் பேசாமை (ஆசாரக் கோவை)

கொச்சைச் சொல்லுக்கு மாற்றாக 'அவையியல் கிளவி' சொல்லுதல் (தொல்காப்பியம்)

அவைக்கேற்ற வரையறை கொள்ளுதல் (பழமொழி)

முடிவுக்கு வந்த கருத்தை ஏற்றுக் கொள்ளல் (அவிநயம்)

தலைமைக்குக் கட்டுப்படல் (நாலடி)

மகிழ்ச்சியான ஆரவாரக் குறிப்புகள் (மதுரைக் காஞ்சி)

பாராட்டல் (பழமொழி)

நன்றி கூறல் (திருக்குறள்)


இவை பட்டிமன்றத்தில் காணப்படும் பண்புகளாகும்.