சமையல் குறிப்புகள்

அடை


தேவையானப் பொருள்கள்

ப. அரிசி - நூறு கிராம்
பு. அரிசி - நூறு கிராம்
பாசிப் பருப்பு - நூறு கிராம்
கடலை பருப்பு- நூறு கிராம்
துவரம் பருப்பு- நூறு கிராம்
உளுந்து - நூறு கிராம்
வர மிளகாய் - ஐந்து
பூண்டு - இரண்டு பல்
சோம்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு டீ ஸ்பூன்
தேங்காய் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு – இரண்டு டீ ஸ்பூன்
சி. வெங்காயம் - இருநூறு கிராம்


செய்முறை


முதலில் அரிசி வகைகளையும், பருப்பு வகைகளையும் ஒன்றாக அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தனியாக ஒரு கிண்ணத்தில் வரமிளகாய், சோம்பு இரண்டையும் ஊற வைக்கவும். சி. வெங்காயத்தை மிக நைசாக நறுக்கவும். அரிசி, பருப்பு கலவை நன்கு ஊறியதும் நன்றாக கழுவி உப்பு, ஊற வைத்த மிளகாய், சோம்பு, பூண்டுப் பல் சேர்த்து கிரைண்டரில் போட்டு ஐந்து நிமிடம் அரைக்கவும். வழிக்கும் நேரத்தில் பெருங்காயத் தூள் சேர்த்து ஒரு சுற்று சுற்றியதும் வழித்து எடுக்கவும். வெங்காயத்தை மாவுடன் நன்கு கலக்கவும் தோசைக் கல்லை சூடாக்கி ஒரு கரண்டி மாவை வைத்து தோசை போல் ஆனால் சிறிது கணமாக பரப்பி விடவும். சுற்றி எண்ணை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும்.

குறிப்பு:

அடை மாவில் விரும்பினால் எதாவது ஒரு கீரை வகையை பொடியாக நறுக்கிப் போடலாம். இது தேங்காய் சட்னியுடனோ வெல்லத்துடனோ சாப்பிட மிக சுவையாக இருக்கும்.


தேங்காய் சட்னி

தேவையானப் பொருட்கள்

தேங்காய் - அரை மூடி
பொட்டுக் கடலை - இரண்டு டேபிள் ஸ்பூன்
ப. மிளகாய் - மூன்று
பூண்டு பல் - ஒன்று
சி. வெங்காயம் - ஒன்று
இஞ்சி - மிக சிறிய துண்டு
உப்பு - ஒரு டீ ஸ்பூன்
எண்ணை - ஒரு டீ ஸ்பூன்
கடுகு & உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து

செய்முறை

முதலில் தேங்காயை துருவி, அந்த துருவலுடன் பொட்டுக் கடலை, ப. மிளகாய், இஞ்சி, சி. வெங்காயம், பூண்டுப் பல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை கொட்டி அரை டம்ளர் தண்ணிர் ஊற்றி நன்கு கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை போட்டு சட்னியில் கொட்டி இறுக மூடி வைத்து ஐந்து நிமிடம் கழித்துத் திறந்து பரிமாறவும்.